Section 80C: வருமான வரி சட்ட பிரிவு 80சி வரிவிலக்கு, சலுகை குறித்த முழு விவரம்

வருமான வரி செலுத்துவோர் பல்வேறு முதலீட்டு நடவடிக்கைகள் மூலம் வரிச் சலுகைகளைப் பெறக் கூடிய வருமான வரிச் சட்டத்தின் மிகவும் பிரபலமான பிரிவு குறித்து நீங்கள் அறிய வேண்டிய அனைத்தும் இங்கே தெளிவுபடுத்தப்பட்டுள்ளன.

வருமான வரி செலுத்தும் மாதச் சம்பளம் பெறுவர்கள் தங்களின் வருமானத்தின் மீது வரிச் சலுகை பெறுவதற்கு பொதுவாக பிரிவு 80C பயன்படுகிறது. என்றாலும், இந்தியாவில் வரி செலுத்தும் அனைவரும் தங்களின் வரிக்குட்பட்ட வருமானத்தில் பல முதலீடு நடவடிக்கைளுக்காக வரிச் சலுகை பெறுவதற்கு இந்த 80சி பிரிவினை பயன்படுத்துகின்றனர். அந்த வகையில், இந்த பிரிவு 80C பற்றி நாம் அனைவரும் அறிந்து கொள்வது அவசியமான ஒன்றாகும்.

 

பிரிவு 80C என்றால் என்ன?

வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80C என்பது வருமான வரி செலுத்தும் தனிநபர் ஒருவர் தனது வருமானத்தில் வரி விலக்கு பெறக்கூடிய செலவினங்கள், முதலீடுகளைப் பட்டியலிட்டுக் காட்டுகிறது. ஒருவர் ஒரு வருடத்தில் ரூ.1.5 லட்சம் வரை வரி விலக்குப் பெறுவதற்கு பிரிவு 80C வழிவகை செய்கிறது. எனினும், வரி செலுத்தும் ஒருவர் திட்டமிட்டு செலவு செய்து பிரிவு 80C-யின் கீழ் வரிவிலக்கு கோரும்போது ரூ.2 லட்சம் வரை வரியைக் குறைக்க முடியும்.

யாரெல்லாம் பிரிவு 80C-ல் வரிவிலக்கு கோரலாம்?

வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80C-ன் படி, தனிநபர்கள் மற்றும் பிரிக்கப்படாத இந்துக் குடும்பம் என வகைப்படுத்தப்பட்ட வரி செலுத்துபவர்களே வரிவிலக்குக்கு விண்ணப்பிக்க முடியும்.

 

பிரிவு 80C-யின் துணைப் பிரிவுகள்

வருமான வரிச் சட்டப் பிரிவு 80C, 80CCC, 80CCC (1), 80CCD (1b) மற்றும் 80CCD (2) ஆகிய துணைப் பிரிவுகளைக் கொண்டுள்ளன. இந்த அனைத்து பிரிவுகளின் கீழ் ஒரு வருடத்திற்கு ரூ.2 லட்சம் வரை வரிவிலக்கு வரம்பாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. (ரூ.1.5 லட்சம், கூடுதலாக ரூ.50,000 வரிவிலக்கு பெற முடியும். இதனை இந்தக் கட்டுரையின் பிற்பகுதி விளக்குகிறது.)

Section 80C: All you need to know

 

பிரிவு 80C வரிக் குறைப்பு பட்டியல்

வருமான வரி பிரிவு கிடைக்ககூடிய வரிக் குறைப்பு
80C நீங்கள் ஆயுள் காப்பீடு, பொது வருங்கால வைப்பு நிதி, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி, ஈக்விட்டி இணைக்கப்பட்ட சேமிப்புத்  திட்டங்கள், சுகன்யா சம்ரித்தி யோஜனா, தேசிய சேமிப்புச் சான்றிதழ், மூத்தக் குடிமக்கள் சேமிப்த்பு திட்டம், யுலிப் (ULIP) காப்பீடு திட்டம், 5 ஆண்டு வரி சேமிப்புக்கான வைப்பு நிதி, நபார்டு வங்கியின் கிராமப்புற பத்திரங்கள் போன்றவற்றில் முதலீடு செய்திருந்தால் பிரிவு 80C-யின் கீழ் வரி விலக்கு பெறலாம். அதேபோல, வீட்டுக் கடனுக்கான அசல் தொகை, முத்திரைத் தாள் கட்டணம், வீடு வாங்கும்போது செலுத்திய பதிவுக் கட்டணங்கள் மீதும் பிரிவு 80சி-யின் கீழ் வரிக் குறைப்பு பெற முடியும்.
80CCC வருடாந்திர ஆயுள் காப்பீட்டிற்கு பிரிவு 80சிசிசி-யின் கீழ் வரிவிலக்கு பெறமுடியும். இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் அல்லது ஓய்வூதியம் பெறுவதற்கான பிற ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களின் வருடாந்திர திட்டங்களுக்கு செலுத்தும் பிரீமியம் தொகைக்கு பிரிவு 80CCC-யின் கீழ் வரி விலக்கு கோரலாம்.
80CCD (1) தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் பணியாளர்கள் செலுத்தும் தொகைக்கு பிரிவு 80சிசிடி (1) வரிவிலக்கு அளிக்கிறது.

 

அதிகபட்சமாக கீழ்கண்டவற்றில் எது குறைவாக இருக்கிறதோ, அதற்கு பிரிவு 80சிசிடி (1)-ன் கீழ் விலக்கு பெற முடியும்:

 

* ஊதியத்தில் 10% (ஊழியர்களுக்கு) அல்லது மொத்த வருமானத்தில் 20% (சுயதொழில் செய்து வரி செலுத்துவோருக்கு).

 

* ரூ.1.5 லட்சம்.

80CCD (1b) பிரிவு 80சிசிடி (1பி) தேசிய ஓய்வூதிய திட்டத்திற்கான பங்களிப்பிற்காக கூடுதலாக வரி விலக்கு பெற வகை செய்கிறது. வரி செலுத்தும் ஒருவர் தேசிய ஓய்வூதிய திட்டத்தில் சேமிப்பதன் மூலம் ஆண்டுக்கு ரூ.2 லட்சம் வரை சேமிக்க முடியும். அதேபோல அடல் ஓய்வூதிய திட்டத்தில் சேர்ந்திருப்பவர்களும் பிரிவு 80CCD (1b)-ன் கீழ் வரிவிலக்கு பெற முடியும்.
80CCD (2) பிரிவு 80சிசிடி (2) நிறுவனத்தின் பங்களிப்புக்கு விலக்கு பெற வழிவகை செய்கிறது. 80சிசிடி-யின் கீழ் பெறும் விலக்கு என்பது ஒருவரின் ஊதியத்தில் அடிப்படைச் சம்பளம், அகவிலைப்படியில் 10% மட்டுமே. இந்தப் பிரிவின் கீழ் சுயதொழில் செய்து வரி செலுத்தும் நபர் வரிவிலக்கு பெற முடியாது.

  

பிரிவு 80C-யின் கீழ் அதிகபட்ச வரிவிலக்கு

வரி செலுத்தும் நபர் ஒருவர் ஆண்டொன்றுக்கு ரூ.1.50 லட்சம் வரை பிரிவு 80சி-யின் கீழ் அதிகபட்சமாக வரிவிலக்கு பெற முடியும். இது, பிரிவு 80சி, துணைப் பிரிவுகள் 80சிசிசி, 80சிசிடி (1) ஆகியவற்றின் மூலம் கிடைக்கும் ஒட்டுமொத்த சேமிப்பாகும். அதேநேரத்தில் தேசிய ஓய்வுதியத் திட்டத்தில் சேர்ந்திருக்கும் வரி செலுத்துபவர்கள் பிரிவு 80சிசிடி (1பி) மூலம் கூடுதலாக ரூ.50,000 விலக்கு பெற முடியும்.

 

80C முதலீடு

பிரிவு 80சி-யின் கீழ் கிடைக்கும் வரிவிலக்கு என்பது உங்களின் செலவினங்களை முக்கியமான இரண்டு நடவடிக்கைகளாக வகைப்படுத்துகிறது. அவை:

  • முதலீட்டு நடவடிக்கைகள்
  • செலவின நடவடிக்கைகள்

 

பிரிவு 80C-யின் கீழ் முதலீடு

ஆயுள் காப்பீடு பிரீமியம் காப்பீடு + முதலீடு
யூலிப் காப்பீட்டு திட்டம் காப்பீடு + முதலீடு
பிபிஎஃப் ஓய்வு
இபிஎஃப் ஓய்வு
காப்பீட்டு நிறுவனங்களின் ஓய்வூதிய திட்டம் ஓய்வு
தேசிய ஓய்வூதிய திட்டம், அடல் பென்ஷன் யோஜனா ஓய்வு
தேசிய சேமிப்புச் சான்றிதழ் நீண்டகால நிலையான வருமானம்
5 ஆண்டு ஃபிக்சட் டெபாசிட் நிலையான வருமானம்
5 ஆண்டு அஞ்சலக வைப்பு அல்லது சேமிப்பு நிலையான வருமானம்
எஸ்சிசிஎஸ் நிலையான வருமானம்
என்ஹெச்பி டெபாசிட் திட்டம் நிலையான வருமானம்
ஈக்விட்டி இணைப்பு சேமிப்புத் திட்டம் (இஎல்எஸ்எஸ்) ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட்
குழந்தைகளுக்கான கல்விக் கட்டணம் (2 குழந்தைகள்) செலவினம்
வீட்டுக் கடன் வட்டி சொத்து முதலீடு
முத்திரைத்தாள் செலவு, வீடு வாங்கும்போது செய்யும் பதிவுச் செலவு சொத்து முதலீடு

 

பிரிவு 80C-யின் கீழ் சலுகை பெற தகுதியான செலவுகள்

  • குழந்தைகளுக்கான கல்விக் கட்டணம்: இந்தியாவில் குழந்தைகளுக்கான பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழ கல்விக் கட்டணங்கள் (tuition fees) செலுத்தியதற்கு பிரிவு 80சி-யின் கீழ் வரிவிலக்கு பெற முடியும். ஒரு நிதியாண்டில் 2 குழந்தைகளுக்கு செய்த கல்விச் செலவினங்களுக்காக ஒருவர் வரிவிலக்கு பெற முடியும்.
  • ஃபிக்சட் டெபாசிட்: மிட் டெர்ம் ஃபிக்சட் டெபாசிட்கள் (குறைந்தது 5 ஆண்டுகள்) பிரிவு 80சி-யின் வரிவிலக்கு பெற தகுதியானவை. அதேநேரத்தில் ஃபிக்சட் டெபாசிட் (Fixed deposits) தொகை மூலம் கிடைக்கும் வட்டி வருமானத்திற்கு வரி செலுத்த வேண்டும்.
  • ஆயுள் காப்பீடு, யூலிப்: ஒரு தனிநபர் அவருக்கு, அவரது மனைவி, குழந்தைகளுக்கு செலுத்தும் ஆயுள் காப்பீடு (Life Insurance) பிரீமியத்திற்கு பிரிவு 80சி-யின் கீழ் வரிவிலக்கு பெற முடியும். அதேபோல் யூலிப் (ULIP) பிரீமியம் தொகைக்கும் வரிவிலக்கு பெற முடியும்.
  • பிபிஎஃப்: உங்கள் பிபிஎஃப் (PPF) மூலம் ஒவ்வோர் ஆண்டும் ரூ.1.5 லட்சம் வரை முதலீடு செய்ய முடியும். இந்த பிபிஎஃப் கணக்கிறகு 15 ஆண்டுகள் வரை லாக்-இன் காலமும் உண்டு. பிபிஎஃப் கணக்கு முடிந்த பின்னர் முதிர்வுத் தொகைக்கும் வரிவிலக்கு உண்டு. உங்களின் பிபிஎஃப் கணக்கு என்பது உங்கள் பெயரிலோ அல்லது உங்கள் மனைவி, குழந்தை பெயரிலோ இருக்க வேண்டும்.
  • தொழிலாளர் வருங்கால வைப்புநிதி (இபிஎஃப்): இபிஎஃப் (EPF) எனப்படும் தொழிலாளர் வருங்கால வைப்புநிதி என்பது, உங்களின் வருமானத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட தொகையானது ஓய்வூதிய நிதி என்ற பெயரில் சேர்க்கப்படுவதாகும். இதனை நீங்கள் உங்களின் UAN லாகின் மூலம் சரிபார்க்க முடியும். இந்த தொகைக்கு 80சி-யின் கீழ் வரிச்சலுகையும் உண்டு. மேலும், ஆன்லைனில் உறுப்பினர் பாஸ்புக் சரிபார்ப்பது வழிமுறைகளையும் அறியவும்.

இதையும் வாசிக்க: வீடு வாங்குவதற்கு உங்களது வருங்கால வைப்புநிதியை பயன்படுத்துவது எப்படி?

  • ஈக்விட்டி இணைப்பு சேமிப்புத் திட்டம்: இஎல்எஸ்எஸ் என்பது 3 ஆண்டுகள் லாக்-இன் பீரியட் கொண்ட ஈக்விட்டி மியூச்சுவல் ஃப்ண்ட் திட்டமாகும் ((Equity Linked Savings Scheme – ELSS). இஎல்எஸ்எஸ் ஃபண்டுகளின் ஒதுக்கீடு செய்யப்படும் சொத்துகள் பெரும்பாலும் (உங்களின் தொகையில் 65% ஈக்விட்டியில் ஒதுக்கீடு செய்யப்படும்) ஈக்விட்டி மற்றும ஈக்விட்டி பத்திரங்களை அடிப்படையாகவே கொண்டிருக்கும். அவை நிலையான வருமானத்திற்கு உரிய அம்சங்களைக் கொண்டிருக்கிறது.
  • தேசிய சேமிப்புச் சான்றிதழ் (என்எஸ்சி): தேசிய சேமிப்புச் சான்றிதழ் (National Savings Certificate – NSC) மீது செலுத்தும் கட்டணங்களுக்கு பிரிவு 80சி-யின் கீழ் வரிவிலக்கு பெறலாம். தேசிய சேமிப்புச் சான்றிதழ் மீது பெறப்படும் வட்டிக்கு வரி விதிக்கப்படும்போது, அதை மீண்டும் முதலீடு செய்து மீண்டும் 80சி-யின் கீழ் வரிவிலக்கு பெறலாம்.
  • மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (எஸ்சிஎஸ்எஸ்): 60 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் தாங்கள் செலுத்தும் வரிக்கு எஸ்சிஎஸ்எஸ் (SCSS) திட்டத்தின் மூலம் 80சி-யின் கீழ் விலக்கு பெற முடியும். விருப்பு ஓய்வு பெற விரும்புகிறவர்கள் 55 வயதிற்கு மேல் எஸ்சிஎஸ்எஸ் திட்டத்தில் சேரலாம்.
  • சுகன்யா சம்ரித்தி யோஜனா: பெண் குழந்தைகளின் பெற்றோர்கள் சுகன்யா சம்ரித்தி யோஜனா (Sukanya Samriddhi Yojana) திட்டத்தில் செலுத்தும் பிரீமியம் தொகைக்கு பிரிவு 80சி-யின் கீழ் வரிவிலக்கு பெற முடியும். இரண்டு பெண் குழந்தைகளுக்கு பொருந்தும் இந்தத் திட்டம், இரட்டைப் பெண் குழந்தைகள் பிறக்கும்போது, மூன்றாவது பெண் குழந்தைக்கு நீட்டித்துக் கொள்ள முடியும்.
  • தேசிய ஓய்வூதிய திட்டம் (என்பிஎஸ்): என்பிஎஸ் (NPS) என்பது ஓய்வூதியம் இல்லாத ஊழியர்களுக்கான திட்டமாகும். 18 முதல் 60 வயதிற்குட்பட்ட யாரும் இந்த திட்டதில் இணையலாம்.
  • வீட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்துதல்: வீட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்தும் ஒருவர் தாம் செலுத்தும் வீட்டுக் கடன் அசல் மீது பிரிவு 80சி-யின் கீழ் ஆண்டு ஒன்றுக்கு ரூ.1.5 லட்சம் வரை வரிக் குறைப்பு பெற முடியும். வீட்டுக் கடனிற்கான வட்டிக்கு வரிவிலக்கு கோர முடியாது. இந்த வரி்ச்சலுகை பலனைப் பெறுவதற்கான லாக்-இன் காலம் 5 ஆண்டுகள். ஒருவேளை அந்தச் சொத்தினை வாங்கியதிலிருந்து 5 ஆண்டுகளுக்குள் அதனை நீங்கள் விற்பனை செய்ய நேர்ந்தால், முந்தைய ஆண்டுகளில் நீங்கள் அனுபவித்த அனைத்து வரிவிலக்குகளும் சொத்தினை விற்பனை செய்த ஆண்டிற்கான உங்களது வருமானத்தில் கணக்கிடப்படும்.
  • முத்திரைக் கட்டணம் மற்றும் சொத்து மீதான பதிவுக் கட்டணம்: சொத்து ஒன்றினை வாங்கும்போது செலுத்தும் முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணத்தில் ஒட்டு மொத்த வரம்பான ரூ.1.5 லட்சத்திற்குள் பிரிவு 80சி-யின் கீழ் வரி விலக்கு பெற முடியும். இந்த வரி விலக்கு உண்மையாக பணம் செலுத்தப்பட்ட ஆண்டில் மட்டுமே கோர முடியும். தனிநபர் மற்றும் பிரிக்கப்படாத இந்துக் குடும்பத்தினர் இந்த வரி விலக்கிற்கு விண்ணப்பிக்கலாம்.
  • தேசிய வீட்டுவசதி வங்கி வைப்புத்தொகை: அரசின் தேசிய வீட்டுவசதி வங்கியில் செலுத்தப்படும் வைப்புநிதித் திட்டங்கள் மற்றும் ஓய்வூதியத் திட்டத்தில் செலுத்தப்படும் தொகைகளுக்கு பிரிவு 80சி-யின் கீழ் விலக்கு கோர முடியும்.
  • நபார்டு வங்கி பத்திரங்கள்: நபார்டு வங்கி பத்திரங்களை (NABARD bonds) வாங்கும்போது அந்த தொகைக்கு பிரிவு 80சி-யின் கீழ் வரி விலக்கு பெற முடியும்.
  • வருடாந்திர திட்டங்களுக்கான சந்தா: தனிநபர் அல்லது பிரிக்கப்படாத இந்துக் குடும்பத்தினர் ஆயுள் காப்பீடு அல்லது பிற காப்பீடு நிறுவனங்களின் அறிவிக்கப்பட்ட வருடாந்திர திட்டங்களுக்கு செலுத்தும் தொகைக்கு பிரிவு 80சி-யின் கீழ் வரிவிலக்கு பெற முடியும். பிரிவு 80சி0யின் கீழ் வரிவிலக்கு பெற தகுதியான அறிவிக்கப்பட்ட வருடாந்திர திட்டங்கள்:

நியூ ஜீவன் தாரா

நியூ ஜீவன் தாரா – 1

நியூ ஜீவன் அக்‌ஷய்

நியூ ஜீவன் அக்‌ஷய் – 1

நியூ ஜீவன் அக்‌ஷய் – 2

 

பிரிவு 80C முதலீடுகள் வைத்திருக்கும் காலம்

ஒரு குறிப்பிட்ட ஹோல்டிங் பீரியடில் நீங்கள் முதலீடு செய்யவில்லை என்றால், பிரிவு 80சி-யின் கீழ் பெறப்படும் விலக்கு நிறுத்தப்படலாம். பிரிவு 80சி-யின் கீழ் வரிவிலக்கு பெற தொடந்து முதலீடு செய்யப்பட வேண்டிய குறைந்தபட்ச காலம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

 

80C முதலீடு லாக்இன் காலம்

என்பிஎஸ் ஓய்வு பெறும் காலம் வரை
பிபிஎஃப் 15 ஆண்டுகள்
யூலிப் 5 ஆண்டுகள்
வீட்டுக் கடனுக்கான அசலைத் திருப்பிச் செலுத்துதல் அல்லது குடியிருக்கும் வீடு கட்டுதல் 5 ஆண்டுகள்
எஸ்சிஎஸ்எஸ் பங்களிப்பு 5 ஆண்டுகள்
வங்கி அல்லது அஞ்சலக ஃபிக்சட் டெபாசிட்கள் 5 ஆண்டுகள்
ஈக்விட்டி இணைப்பு சேமிப்புத் திட்டம் 3 ஆண்டுகள்
ஆயுள் காப்பீட்டுத் திட்டம் 2 ஆண்டுகள்

 

80C – அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQs)

80C என்றால் என்ன?

80C என்பது வருமான வரிச் சட்டம் 1961-ன் படி, வரி விலக்கு பெறுவதற்கான முதலீடுகள், செலவினங்களை பட்டியலிடும் பிரிவு.

பிரிவு 80 எப்போது நடைமுறைக்கு வந்தது?

2006 ஏப்ரல் 1-ம் தேதி முதல் பிரிவு 80 நடைமுறைப்படுத்தப்பட்டது.

ஆயுள் காப்பீட்டில் என்னென்ன வரிச் சலுகைகள் பெற முடியும்?

வருமான வரிச் சட்டம் 1961-ன் படி ஆயுள் காப்பீட்டு பிரீமியம் தொகையில் ஆண்டுக்கு ரூ.1.5 லட்சம் வரையில் வரிச் சலுகை பெறலாம்.

80சி-யின் கீழ் அதிகபட்ச வரிச் சலுகை எவ்வளவு?

வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80சி-யின் படி ஆண்டு ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ1.50 லட்சம் வரையில் வரிச் சலுகை பெற முடியும். அதேபோல், துணைப் பிரிவு 80சிசிடி(1பி)-யின் படி என்பிஎஸ்-ல் முதலீடு செய்யும்போது கூடுதலாக ரூ.50,000 வரிச் சலுகை பெற முடியும்.

80சி-யின் கீழ் விலக்கு பெற தகுதியானவர்கள் யார்?

வரி செலுத்தும் தனிநபர்கள் மற்றும் பிரிக்கப்படாத இந்துக் குடும்பம் என வகைப்படுத்தப்பட்டவர்கள் பிரிவு 80சி-யின் கீழ் வரிவிலக்கு பெற தகுதியுடையவர்கள்.

பிரிவு 80சி-யின் கீழ் எனது முதலீடுகள் மூலம் எவ்வளவு வரியை சேமிக்க முடியும்?

ஒரு தனிநபர் ஆண்டு ஒன்றுக்கு பல்வேறு வகைகளில் ரூ.2 லட்சம் வரையில் பிரிவு 80சி-யின் மூலம் வரிச் சலுகையாக சேமிக்க முடியும்.

80சி-யின் கீழ் வரிவிலக்கு பெற எப்போது நான் முதலீடு செய்ய வேண்டும்?

வருமான வரிச் சட்டம் பிரிவு 80-சியின் கீழ் வரிச் சலுகை பெற நி்தியாண்டின் தொடக்கத்தில் முதலீடு செய்யலாம். இதனால், ஏப்ரல் 1 முதல் மார்ச் 31 வரையிலான முழு நிதியாண்டுக்கும் உங்கள் முதலீடுக்கு வட்டியினை பெற முடியும்.

இரு வேறு முதலீ்ட்டு திட்டங்களில் தலா ரூ.1.5 லட்சம் முதலீடு செய்து, இரண்டு முதலீடுகளுக்கும் 80சி-யின் கீழ் வரிச்சலுகை கோர முடியுமா?

முடியாது. 80சி-யின் கீழ் அதிகபட்சமாக ஆண்டுக்கு ரூ.1.5 லட்சம் வரை மட்டுமே வரிச் சலுகை பெற முடியும். பல்வேறு சேமிப்பு திட்டங்களின் கீழ் நீங்கள் ரூ.10 லட்சம் வரை முதலீடு செய்திருந்தாலும், அவை அனைத்தும் பிரிவு 80சி மற்றும் அதன் துணைப் பிரிவுகளின் கீழ் மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

இபிஎஃப் மற்றும் பிபிஎஃப் ஆகிய இரண்டு வைப்பு நிதித் திட்டங்களில் முதலீடு செய்து, அவை இரண்டிலும் வரிச்சலுகை பெற முடியுமா?

பிரிவு 80சி-யின் கீழ் வரிச் சலுகை பெறுவதற்கு இபிஎஃப், பிபிஎஃப் ஆகிய இரண்டின் தொகைகளும் வரிச் சலுகை பெற அதிகபட்ச தொகையான ரூ.1.5 லட்சத்துக்கு மிகாமல் இருக்கவேண்டும்.

வரி சேமிப்புக்கான முதலீடுகளின் மீது கிடைக்கும் வட்டிக்கு வரிச் சலுகை உண்டா?

கிடையாது. முதலீடுகள் மீது கிடைக்கும் வட்டிக்கு வரி விதிக்கப்படும். ஆனால், என்எஸ்சி முதலீட்டில் கிடைக்கும் வட்டியை மீண்டும் முதலீடு செய்யும்போது அதற்கு வரிச் சலுகை பெற முடியும்.

என்னுடைய குழந்தைகளுக்கான பள்ளிக் கட்டணங்களில் நான் வரிச் சலுகை பெற முடியுமா?

முடியும். குழந்தைகள் முழுநேரமாக பள்ளியில் படிக்கும்போது அவர்களின் பள்ளிக் கட்டணத்தில் பிரிவு 80சி-யின் கீழ் வரி விலக்கு பெற முடியும்.

வீட்டுக் கடனுக்கான வட்டி செலுத்தும்போது அதற்காக 80சி-ன் கீழ் வரிச் சலுகை கோர முடியுமா?

முடியாது. வீட்டுக் கடனுக்கான வட்டிக்கு 80சி-யின் கீழ் வரி சலுகைக்கு விண்ணப்பிக்க முடியாது ஆனால், வீட்டுக் கடனுக்கான அசலை திருப்பிச் செலுத்தும்போது அதற்கு வரிச்சலுகை பெற முடியும்.

சொத்திற்கான் முத்திரைத்தாள் கட்டணம் செலுத்துவதற்காக கடன் வாங்கும்போது, அதற்கு வரிச் சலுகை பெற முடியுமா?

இல்லை. முத்திரைத்தாள் கட்டணம் செலுத்த வாங்கும் கடன் தொகைக்கு 80சி-யின் கீழ் வரிச் சலுகை பெற முடியாது. பிரிவு 80சி என்பது உங்களுடைய சொந்தப் பணத்தில் இருந்து செலுத்தப்படும் முத்திரைத்தாள் கட்டணம் மற்றும் சொத்து வாங்குவதற்கான பதிவுக் கட்டணங்களுக்கு மட்டுமே வரிச் சலுகை பெற அனுமதி அளிக்கிறது.

Was this article useful?
  • ? (4)
  • ? (0)
  • ? (0)

Recent Podcasts

  • மஹாதா சத்ரபதி சம்பாஜிநகர் போர்டு லாட்டரி அதிர்ஷ்ட குலுக்கல் ஜூலை 16 அன்று
  • மஹிந்திரா ஹேப்பினெஸ்ட் கல்யாண் – 2 இல் 3 டவர்களை மஹிந்திரா லைஃப்ஸ்பேஸ் அறிமுகப்படுத்துகிறது
  • குர்கானின் செக்டார் 71ல் 5 ஏக்கர் நிலத்தை பிர்லா எஸ்டேட்ஸ் கையகப்படுத்துகிறது
  • குர்கானில் ரூ.269 கோடி மதிப்பிலான 37 திட்டங்களை ஹரியானா முதல்வர் தொடங்கி வைத்தார்
  • ஹைதராபாத்தில் ஜூன்'24ல் 7,104 குடியிருப்பு சொத்துக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன: அறிக்கை
  • இந்திய அல்லது இத்தாலிய பளிங்கு: எதை தேர்வு செய்ய வேண்டும்?